Monday 10 April 2023

சண்டிலிப்பாய் கிராமத்தில் அரிய தமிழ்க் கல்வெட்டு

சண்டிலிப்பாய் கிராமத்தில் அரிய தமிழ்க் கல்வெட்டு


**********************************************
சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் நிர்வாகப் பிரிவுக்கு உட்பட்ட சண்டிலிப்பாய் மேற்கு சொத்துப்புடிச்சி கிராமத்தில் அரிய தமிழ்க் கல்வெட்டு ஒன்றை அக்கிராம மக்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

இவ்விடம் சிறிய பற்றைகள் நிறைந்த ஒதுக்குப்புறமாக இருந்ததால் இக்கல்வெட்டுப்  பற்றி மக்கள் முன்னர் அறிந்திருக்கவில்லை. ஆயினும் பிற தேவைக்காக கடந்த வாரம் இவ்விடத்தைத் துப்பரவு செய்த போது அழிவடைந்த கட்டிட அழிபாடுகளிடையே இக்கல்வெட்டை அடையாளம் கண்ட மக்கள் அது பற்றி தமது கிராம சேவக அதிகாரியிடம் தெரியப்படுத்தியிருந்தனர்.

இதைத் தெரிந்து கொண்ட யாழ்ப்பாணப் பிராந்தியத் தொல்லியல் திணைக்கழக அதிகாரிகளில் ஒருவரான திரு.விஸ்வலிங்கம் மணிமாறனும் பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை விரிவுரையாளர் திரு.கணேசலிங்கம் ஜெயதீஸ்வரனும் அவ்விடத்திற்குச் சென்று உரிய முறையில் இக்கல்வெட்டை மைப்பிரதி எடுத்து அதன் வரலாற்று முக்கியத்துவத்தை வெளிக்கொணர்துள்ளனர்.



ஏறத்தாழ மூன்றடி உயரமும் ஒரு அடி அகலமும் கொண்ட இக்கல்வெட்டு பத்து வரிகளில் பொறிக்கப்பட்டுள்ளது. இது இற்றைக்கு 200 ஆண்டுகளுக்கு முன்னால் பொறிக்கப்பட்ட கல்வெட்டாக இருக்கலாம் என்பதை அவற்றின் எழுத்தமைதி கொண்டு உறுதிப்படுத்த முடிகின்றது. இக்கல்வெட்டின் தொடக்கத்தில் காணப்படும் ஒம் என்ற மங்கல மொழியுடன் தொடங்கும் முதலிரு வரிகள் தேய்வடைந்த நிலையில் காணப்படுகின்றன. அவை கிராமத்தின் பண்டைய பெயரை அல்லது கல்வெட்டுப் பொறிக்கப்பட்ட  காலத்தைக் குறிப்பதாக இருக்கலாம்.

ஏனைய வரிகளில் இப்பிரதேசத்தில் வாழ்ந்த சு.சபாபதிப்பிள்ளை என்ற பெரியவர்  இக்கிராம  மக்களினதும், கால்நடைகளினதும் நன்மை கருதி அமைக்கப்பட்ட வயற்கேணி மடம் பற்றிக் கூறியிருப்பதை இரு ஆய்வாளரும் உறுதிப்படுத்தியுள்ளனர். இவ்வாசகம் உண்மையென்பதை இக்கல்வெட்டுடன் காணப்படும் பெரிய கேணி, ஆவுரஞ்சிகல் என்பன உறுதிப்படுத்துகின்றன. இவற்றுடன் மடமும், சுமைதாங்கியும் இருந்ததாக மக்கள் கூறும் செய்தியை அவ்விடத்தில் காணப்படும் கட்டிட அழிபாடுகள் மேலும் உறுதிப்படுத்துகின்றன.



பேராசிரியர் புஸ்பரட்ணம் இக்கல்வெட்டின் முக்கியத்துவம் பற்றிக் கூறுகையில் யாழ்ப்பாணத்தில் மோட்டார் வாகனப் போக்குவரத்துச் சாதனங்கள் பாவனைக்கு வருவதற்கு முன்னர் பண்டு தொட்டு மக்கள் கால் நடையாகவும், மாட்டு வண்டியிலுமே பயணம் செய்து வந்தனர். அவ்வாறு பயணம் செய்வோரின் நன்மை கருதி முக்கிய போக்கு வரத்து மையங்களில் சுமைதாங்கி, ஆவுரஞ்சிகல், மடம், கேணி அல்லது சிறு குளம் அமைக்கப்படுவது வழக்கமாக இருந்தது. இதை யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் காணமுடிகின்றது.

இவற்றில் இருந்து யாழ்ப்பாணத்தின் பண்டைய போக்கு வரத்துப் பாதைகளை அடையாளம் காணமுடிவதுடன்   அவ்விடங்கள் அக்காலத்தில் சிறு வர்த்தக நகராகவும் இருந்ததை உறுதிப்படுத்த முடிகின்றது. இந்நிலையில் எனது மாணவர்கள் சண்டிலிப்பாய் மேற்கிலுள்ள  சொத்துப்புடிச்சி கிராமத்தில் காணப்பட்ட கல்வெட்டை முறையாகப் படியெடுத்து அதைச் சரிவர வாசித்திருப்பதுடன் அதன் அருகில் இருக்கும் கேணி, ஆவுரச்சிகல் என்பவற்றையும் அடையாளப்படுத்தியுள்ளனர்.



இதன் மூலம் இக்கிராமத்தில் புழக்கத்தில் இருந்த பண்டைய போக்குவரத்துப் பாதையையும், அவ்விடம் முன்பொரு காலத்தில் சிறிய வர்த்தக நாகராக இருந்ததையும் வரலாற்று வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருப்பது மகிச்சி தரும் செய்தியாகும்.

ஈழத்து வரலாறும் தொல்லியலும்

Tuesday 4 April 2023

இலங்கை தமிழர் வரலாறு பற்றி இதுவரை அறியப்படாத புதிய கல்வெட்டு திருகோணமலையில் கண்டுபிடிப்பு - பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்

இலங்கை தமிழர் வரலாறு பற்றி இதுவரை அறியப்படாத புதிய கல்வெட்டு திருகோணமலையில் கண்டுபிடிப்பு - பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் 

 *********************************************

தமிழ் இராச்சியத்தின் தோற்றம் பற்றிய முன்னைய வரலாற்று பார்வையை மீள்வாசிப்பிற்கு உற்படுத்தும் அரிய தமிழ் கல்வெட்டு திருகோணமலையில் கண்டுபிடிப்பு 

 


திருகோணமலை மாவட்டத்தில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கி.பி.13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த இக்கல்வெட்டு இலங்கைத் தமிழர் வரலாறு பற்றி இதுவரை அறியப்படாதிருந்த புதிய பல வரலாற்று உண்மைகள் கூறுகின்றது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.


மேலும் தெரிவிக்கையில்,


புகைபடர்ந்திருக்கும் இலங்கைத் தமிழரின் ஆதிகால, இடைக்கால வரலாற்றுக்குப் புது வெளிச்சமூட்டி வருவதில் தொல்லியற் கண்டுபிடிப்புக்களுக்கு முக்கிய இடமுண்டு.


அக்கண்டுபிடிப்புக்களில் கல்வெட்டுக்கள் நம்பகரமான முக்கிய சான்றுகளாகப் பார்க்கப்படுகின்றன.


அவை இலக்கியங்களைப் போல் விரிவான வரலாற்றுச் செய்திகளைத் தராவிட்டாலும் அவை வரலாற்றுச் சம்பவங்கள் நடந்த சமகாலத்திலேயே பெரும்பாலும் எழுதப்பட்டிருப்பதினால் அவற்றில் இருந்து அறியப்படும் வரலாற்றுச் செய்திகள் நம்பகரமானதாகவே பார்க்கப்படுகின்றன.


இவை ஒரு நாட்டில் வாழும் பல இன மக்கள் பற்றிய பாரம்பரிய வரலாற்று நம்பிக்கைகளை மீளாய்வு செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.


இதற்கு திருகோணமலை மாவட்டத்தில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டையும் உதாரணமாகக் குறிப்பிடலாம்.



முதலில் இக்கல்வெட்டுப் பற்றிய செய்தி திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் (J.S.Arulraj) என்பவரால் வைத்திய கலாநிதி த.ஜீவராஜிக்கு (T. Jeevaraj) தெரியப்படுத்தப்பட்டதன் மூலம் அது பற்றிய தகவல் எமக்கும் பரிமாறப்பட்டது.


அவர்கள் அனுப்பிய புகைப்படத்தைப் பார்த்து இக்கல்வெட்டின் முக்கியத்துவத்தைத் தெரிந்துகொண்ட நாம் அக்கல்வெட்டை ஆய்வு செய்வதற்கு தொல்லியற் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியைப் பெற்று யாழ்ப்பாணப் பிராந்திய தொல்லியற் திணைக்கள ஆய்வு உத்தியோகத்தர்களான பா.கபிலன், வி. மணிமாறன் மற்றும் முன்னாள் தொல்லியல் விரிவுரையாளர் க.கிரிகரன் ஆகியோருடன் 30.01 2021 அன்று திருகோணமலை சென்றிருந்தோம்.


இந்நிலையில் திருகோணமலை மாவட்ட வரலாற்றுச் சின்னங்களைக் கண்டறிந்து பாதுகாப்பதில் அதிக அக்கறையுடன் செயற்பட்டுவரும் வைத்திய கலாநிதி த.ஜீவராஜூடன் வைத்திய கலாநிதி அ.ஸதீஸ்குமார், கிராம உத்தியோகத்தர் நா.சந்திரசேகரம் மற்றும் கோமரன்கடவல பிரதேச செயலக உத்தியோகத்தர் நா.ஜெகராஜ் ஆகியோரும் கல்வெட்டைப் படியெடுக்கும் பணியில் ஆர்வத்துடன் இணைந்து பணியாற்றியமை எமக்கு மனமகிழ்வைத் தந்ததுடன், அச்சமற்ற சூழ்நிலையில் இக்கல்வெட்டைப் படியெடுக்கவும் வாய்ப்பாக இருந்தது.


இக்கல்வெட்டு திருகோணமலை நகரில் இருந்து ஏறத்தாழ 50 கி.மீ தொலைவில் திருகோணமலை மாவட்டத்தில் தனி நிர்வாகப் பிரிவாக உள்ள கோமரன்கடவல பிரதேசத்தில் உள்ள முக்கிய வீதியுடன் இணைந்திருக்கும் காட்டுப்பகுதியில் காணப்படுகின்றது.


முன்னர் இப்பிரதேசம் கட்டுக்குளப்பற்று நிர்வாகப் பிரிவாக இருந்த போது இந்த இடம் குமரன்கடவை எனவும் அழைக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகின்றது.


இங்குள்ள காட்டுப்பகுதியில் கல்வெட்டுடன் அதன் சமகாலத்திற்குரிய அழிவடைந்த சிவாலயமும், அதன் சுற்றாடலில் அழிவடைந்த கட்டிட அத்திவாரங்களும் காணப்படுகின்றன.



அவற்றுள், அழிவடைந்த சிவாலயம் அதேநிலையில் தொல்லியற் திணைக்களத்தால் பாதுகாக்கப்பட்டிருக்கின்றது.


இவ்வாலயத்திற்கு மிக அருகிலுள்ள சிறு மலையிலேயே கல்வெட்டும் காணப்படுகின்றது.


இம்மலையின் மேல்பகுதியில் திருவாசிபோன்ற வட்டமும், அதனுடன் இணைந்த ஆவுடையாருடன் கூடிய சிவலிங்கமும் செதுக்கப்பட்டுள்ளன.


சிவலிங்கத்திற்கு மேலிருக்கும் வட்டம் சக்தி வழிபாட்டு மரபுக்குரிய சக்கரமாக இருக்கலாம் எனப் பேராசிரியர் பொ.இரகுபதி குறிப்பிடுகின்றார்.


இக்குறியீடுகளுக்கு கீழே 22 வரிகளில் தமிழ்க் கல்வெட்டுப் பொறிக்கப்பட்டுள்ளது.


முதல் இரு வரிகளும், ஏனைய வற்றில் சில சொற்களும் சமஸ்கிருதத்தில் இருக்கின்றன.


கல்வெட்டின் வலப்பக்கத்தில் உள்ள பல எழுத்துப் பொறிப்புக்கள் மலையின் மேற்பகுதியில் இருந்து கீழ்நோக்கி வழிந்தோடும் நீரினால் சிதைவடைந்தும், தெளிவற்றும் காணப்படுகின்றன.


இடப்பக்க எழுத்துப் பொறிப்புக்கள் தெளிவாகக் காணப்பட்டதால் கல்வெட்டைப் படியெடுத்தவர்கள் ஆர்வமிகுதியால் பல சொற்களைப் படித்தனர்.


ஆயினும் கல்வெட்டின் ஒரு பாகம் தெளிவற்றுக் காணப்பட்டதால் அது கூறும் வரலாற்றின் முழுமையான உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை.


இதனால் தென்னாசியாவின் முதன்மைக் கல்வெட்டு அறிஞரும், எனது கலாநிதிப்பட்ட ஆய்வு மேற்பார்வையாளருமான பேராசிரியர் வை.சுப்பராயலுவுக்கும், தமிழக தொல்லியற் துறையின் முன்னாள் மூத்த கல்வெட்டறிஞரான கலாநிதி சு.இராஜகோபாலுக்கும் இக்கல்வெட்டுப் படிகளின் புகைப்படங்களை அனுப்பி வைத்தேன்.



அவர்கள் இருவரும் ஒருவார காலமாக கடும் முயற்சி செய்து கல்வெட்டின் பெரும்பகுதியை வாசித்து அதன் வாசகத்தை தற்போது எமக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


அதன் வாசகம் பின்வருமாறு:


01)... ... க்ஷகே ஸ்ரீவிம்[ங்கோ3] நௌ ம்ருகே3 விம்ச0 திப4.


02).... .....ச0க்தி ப்ரதிஷ்டா2ம் கரோத் க்ருதி: ஸ்வஸ்தி ஸ்ரீ ...


03) [த்திகள்?]  [ஸ்ரீகுலோஸத்துங்கசோழக் காலிங்கராயநேன் ஈழ[ம


04) ண்டலமான மும்முடி] சோழமண்டல மெறிந்தும் கங்கராஜ காலிங்க வி-


05) ஜயவாகு தே3வற்கு வீராபி4ஷேகம் பண்ணுவித்து அநந்தரம் அஷ்ட-


06) [நேமி பூசை கால]ங்களில் ஆதி3க்ஷேத்ரமாய் ஸ்வயம்பு4வுமாந திருக்கோ-


07) [யிலை]யுடைய நாயநாரை தெ3ண்டன் பண்ணி இன்னாய-


08) நாற்கு ச0[க்தி] ப்ரதிஷ்டையில்லாமையில் திருக்காமக்கோட்ட நா


09) ச்சியாரை எழுந்தருளிவித்துத் திருப்ரதிஷ்டை பன்ணுவித்து நமக்கு [ப்


10) ராப்தமாய்] வருகிற காலிங்கராயப் பற்றில் மாநாமத்[துஸ நாட்டில் ல-


11) ச்சிகா[தி]புரம் இதுக்குள் நாலூர் வேச்சர்களுள்ளிட்ட நில-


12) மும் . . .றிதாயாளமு . . .ட்டும் இதில் மேநோக்கிய


13) மரமும் கீநோக்கிய கிணறும்பேருடரை நீக்கி குடிமக்களுள்பட


14) இந்நா[ச்சியார்க்கு திருபப்]படிமாற்றுக்கும் மண்டபக் கொற்று-


15) க்கும்சாந்த்3ராதி3த்தவரையும் செல்லக் கடவதாக ஹஸ்தோதகம் ப-


16) ண்ணிக் குடுத்தேன்இ .... லுள்ளாரழிவு படாமல்


17) ...ண்ண..ட்ட......ப் பெறுக்கிவுண்டார்கள் [ஆ]ய்


18) நடத்தவும் இதுக்கு . . . . ண்டாகில் காக்கையும் நாயும்


19) மாக . . டையார் பி... கெங்கைக் கரையிலாயிரங்


20) குரால் பசுவைக் கொன்றா[ர்பாவங்] கொண்டார்கள் ஆயிரம் ப்3ரா-


21) ஹ்மணரைக் கொன்றார் பாவ[ங் கொண்]டார்கள் மேலொரு ...


22) மாற்றம் விலங்குரைப்பார் .. காலிங்கராயரின் [சொல்படி] ... ...


23) த்தியஞ் செய்வார் செய்வித்தார்   


கி.பி.13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த இக்கல்வெட்டுப் பற்றிய தமிழக அறிஞர்களின் வாசிப்பிலிருந்து இலங்கைத் தமிழர் வரலாறு பற்றி இதுவரை அறியப்படாதிருந்த புதிய பல வரலாற்று உண்மைகள் தெரியவந்துள்ளன.


அவை சோழர் ஆட்சியிலிருந்து ஐரோப்பியர் காலம் வரை தமிழர் பிராந்தியங்களின் ஆட்சியுரிமை, நிர்வாக ஒழுங்கு என்பன தனிப்போக்குடன் வளர்ந்தமையைக் கோடிட்டுக் காட்டுவதாக உள்ளன.


மேலும் யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றகாலப் பின்னணி, அது தோன்றிய காலம், தோற்றுவித்த வம்சங்கள் தொடர்பான முன்னைய வரலாற்றுப் பார்வையை மீளாய்வு செய்வதிலும், தெளிவுபடுத்துவதிலும் இக்கல்வெட்டு அதிக முக்கியத்துவம் பெறுகின்றது.


இக்கல்வெட்டுப் படியெடுத்த காலப்பகுதியிலேயே இக்கல்வெட்டின் புகைப்படங்களை எனது ஆசிரியர்களான பேராசிரியர் கா.இந்திரபாலா, பேராசிரியர் சி.பத்மநாதன், பேராசிரியர் பொ.இரகுபதி ஆகியோருக்கு அனுப்பி அவர்களின் கருத்துக்களைப் பெற்றிருந்தேன்.



பேராசிரியர் இரகுபதியால் கல்வெட்டின் சில பாகங்கள் வாசிக்கப்பட்டு அதற்குரிய பொருள் விளக்கத்தையும் அவர் அவ்வப்போது எனக்கு தெரியப்படுத்தியிருந்தார்.


இந்நிலையில் தமிழக அறிஞர்களால் பெருமளவு வாசித்து முடிக்கப்பட்ட கல்வெட்டு வாசகத்திற்கு மேற்கூறிய அனைவருமே வழங்கிய கருத்துக்கள், விளக்கங்கள் என்பன இலங்கைத் தமிழர் வரலாற்றிற்குப் புதிய செய்திகளைச் சொல்வதாக உள்ளன.


தென்னிந்தியாவில் நீண்டகால வரலாறு கொண்டிருந்த சோழ அரசு தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு பத்தாம் நூற்றாண்டிலிருந்து ஒரு பேரரசாக எழுச்சியடைந்த போது அவ்வரசின் செல்வாக்கால் சமகால இலங்கை வரலாற்றிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன.


இதனால் தமிழ் நாட்டு அரச வம்சங்களை வெற்றி கொண்டதன் பின்னர் சோழர்கள் இலங்கைக்கு எதிராகவும் படையெடுத்து வந்தனர்.


இது முதலாம் பராந்தகசோழன் காலத்தில் ஆரம்பித்துப் பின்னர் இராஜராஜசோழன் காலத்தில் கி.பி. 993 இல் இலங்கைளின் வடபகுதி வெற்றி கொள்ளப்பட்டது.


கி.பி. 1012 இல் முதலாம் இராஜேந்திர சோழன் காலத்தில் இலங்கை முழுவதும் வெற்றி கொள்ளப்பட்டு புதிய தலைநகரம் ஜனநாதபுரம் என்ற பெயருடன் பொலன்னறுவைக்கு மாற்றப்பட்டதாக சோழர்காலச் சான்றுகளால் அறிகின்றோம்.


 

சோழரின் 77 ஆண்டுகால நேரடி ஆட்சியில் அவர்களது நிர்வாக முறையே பின்பற்றப்பட்டது.


இதன்படி இலங்கை மும்முடிச் சோழ மண்டலம் என்ற பெயரைப் பெற்றதுடன் வளநாடு, நாடு, ஊர் போன்ற நிர்வாக அலகுகளும் இங்கு பின்பற்றப்பட்டன.


திருகோணமலையில் மட்டுமே ஐந்து வளநாடுகள் இருந்துள்ளன.


அத்துடன் சோழரின் அரசியல், இராணுவ, நிர்வாக நடவடிக்கைகளின் முக்கிய மையமாக திருகோணமலை இருந்ததை அவர்களின் ஆட்சிக்கால ஆதாரங்களும் உறுதிப்படுத்துகின்றன.


 

பொலன்னறுவையைத் தலைநகராகக் கொண்ட சோழரின் ஆட்சி கி.பி.1070 இல் வீழ்ச்சியடைந்தாலும் சோழரின் ஆதிக்கம், நிர்வாக முறை, பண்பாடு என்பன தமிழர் பிராந்தியங்களில் தொடர்ந்திருக்கலாம் எனக் கருதமுடிகின்றது.


இதை உறுதிப்படுத்தும் புதிய சான்றாகவே கோமரன்கடவலக் கல்வெட்டுக் காணப்படுகின்றது.


பொலன்னறுவையில் சிங்கள மன்னர்களின் ஆட்சி ஏற்பட்டு ஏறத்தாழ 125 ஆண்டுகளின் பின்னரும் தமிழர் பிராந்தியங்களில் மும்முடிச் சோழ மண்டலம் என்ற நிர்வாகப் பெயரும், தமிழ் நிர்வாக முறையும் இருந்தன என்ற புதிய செய்தியை இக்கல்வெட்டுத் தருகின்றது.


 

கல்வெட்டுப் பொறிக்கப்பட்ட காலத்தில் இப்பகுதியில், சோழர் ஆட்சிக்குப் பொறுப்பாக மூன்றாம் குலோத்துங்க சோழனது படைத்தளபதிகளுள் ஒருவனான அல்லது அரச பிரதிநிதியான குலோத்துங்கசோழக் காலிங்கராயன் இருந்துள்ளான் என்ற புதிய செய்தியும் தெரியவருகின்றது.


மேலும் இவனே கங்கராஜகாலிங்க விஜயபாகுவிற்கு (கலிங்கமாகனுக்கு) பட்டாபிஷேகம் செய்தான் என்ற அதிமுக்கிய புதிய வரலாற்றுச் செய்தியும் இக்கல்வெட்டிலேயே முதல் முறையாகச் சொல்லப்பட்டுள்ளது.


பேராசிரியர்.சுப்பராயலு இக்கல்வெட்டில் (வரிகள் (3-5) வரும் 'ஸ்ரீகுலோத்துங்கசோழக் காலிங்கராயநேன் ஈழமண்டலமான மும்முடி சோழமண்டல மெறிந்தும் கங்கராஜ காலிங்க விஜயவாகு தேவற்கு வீராபிஷேகம்' என்ற சொற்தொடரை புதிய செய்தி எனக் குறிப்பிட்டுள்ளார்.


பேராசிரியர் இந்திரபாலா இத்தொடரில் உள்ள கங்கராஜ காலிங்கவிஜயவாகு என்பவன் 1215 இல் பொலன்னறுவை அரசை வெற்றி கொண்டு ஆட்சி செய்த கலிங்கமாகன் (மாகன் மாகோன்) என அடையாளப்படுத்துகின்றார்.


அவன் விஜயபாகு என்ற பெயராலும் அழைக்கப்பட்டான் என்பதற்கு 14ஆம் நூற்றாண்டில் எழுந்த நிகாயசங்கிரஹய என்ற சிங்கள இலக்கியத்தில் வரும் குறிப்பை முக்கிய ஆதாரமாகக் காட்டியுள்ளார்.


 

இவற்றிலிருந்து, இலங்கையை வெற்றிகொண்டு பொலன்னறுவையில் ஆட்சிபுரிந்த கலிங்கமாகன், குலோத்துங்கசோழ காலிங்கராயனால் அபிஷேகம் செய்யப்பட்டு ஆட்சியில் அமர்த்தப்பட்டவன் என்ற புதிய ஆதாரம் கிடைத்துள்ளது.


 

இக்கல்வெட்டில் கூறப்படும் குலோத்துங்கசோழக் காலிங்கராயன் மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சிக்காலத்தில் இலங்கையில் இருந்த சோழப்படைத் தளபதியாக அல்லது சோழ அரசப் பிரநிதியாக இருந்திருக்கவேண்டும்.


ஏனெனில் மூன்றாம் குலோத்துங்க சோழனது ஆட்சிக்காலத்தில் (கி.பி 1178-1218) அவன் இலங்கை மீது படையெடுத்து சில வெற்றிகளைப் பெற்றதாக அவனது பத்தாவது ஆட்சியாண்டுக் கல்வெட்டுக் கூறுகின்றது.


இங்கே கலிங்கமாகன் பொலன்னறுவை இராச்சியத்தை கி.பி.1215 இல் வெற்றி கொண்டான் எனக் கூறப்படுகிறது.


 

இதனால் குலோத்துங்க சோழ காலிங்கராயனால் கலிங்கமாகனுக்கு நடத்தப்பட்ட பட்டாபிஷேகம் மூன்றாம் குலோத்துங்க சோழனது ஆட்சியின் இறுதிக் காலப்பகுதியில் நடந்ததெனக் கூறமுடியும்.


 

பொலன்னறுவை இராசதானியில் நிஸங்கமல்லன் ஆட்சியைத் தொடர்ந்து பல குழப்பங்களும், அயல்நாட்டுப் படையெடுப்புக்களும் ஏற்பட்டதை பாளி சிங்கள இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.


இந்நிலையில் சோழ, கேரள, தமிழ்ப்படை வீரர்களின் உதவியுடன் இலங்கை மீது படையெடுத்து வந்த கலிங்கமாகன் 1215 இல் பொலன்னறுவை இராசதானியைக் கைப்பற்றி 44 ஆண்டுகள் வரை ஆட்சி செய்தான் என்ற வரலாறு காணப்படுகின்றது.


இவனது ஆட்சியில் வெறுப்படைந்த சிங்கள மக்களும், சிங்கள தலைநகரும் தெற்கு நோக்கி இடம்பெயர்ந்த போது கலிங்கமாகன் தலைமையில் வடக்கே இன்னொரு அரசு தோன்றியதாக சூளவம்சம், ராஜவெலிய முதலான வரலாற்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.


 

ஆயினும் இக்கலிங்கமாகன் யார்? எந்த நாட்டிலிருந்து படையெடுத்து வந்தவன் என்பதையிட்டு இதுவரை அறிஞர்கள் மத்தியில் வேறுபட்ட கருத்துக்களே இருந்துள்ளன.


சில அறிஞர்கள் இவனை மலேசியா நாட்டிலுள்ள கலிங்கத்திலிருந்து படையெடுத்தவன் எனவும் கூறியுள்ளனர்.


இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள கல்வெட்டில் கலிங்கமாகன் கங்கை வம்சத்துடனும், கலிங்க நாட்டுடனும் தொடர்புடையவன் என்ற புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன.


சோழர்கள் தம் திருமண உறவுகளால் கீழைச்சாளுக்கியரது (வேங்கி அரசு) கங்கை வம்சத்துடனும், படையெடுப்புகள் மூலம் கலிங்க நாட்டுடனும் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதைக் கலிங்கத்துப்பரணியும், சோழக் கல்வெட்டுக்களும் உறுதிப்படுத்துகின்றன.


யாழ்ப்பாணத்தில் அரசமைத்த ஆரியச்சக்கரவர்த்திகளும் கங்கை வம்சத்துடன் தொடர்புடையவர்கள் என அவ்வரசு தொடர்பாக எழுந்த இலக்கியங்கள் கூறுகின்றன.


இவ்வாதாரங்களை அடிப்படையாகக் கொண்டு யாழ்ப்பாண அரசின் தோற்றத்தை கலிங்கமாகனுடன் தொடர்புபடுத்தி பேராசிரியர் இந்திரபாலாவினால் எழுதப்பட்ட அரிய கட்டுரை ஒன்று தற்போது எமக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


அக்கட்டுரையை மக்களுக்கும், மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் இலங்கை ஊடகங்களில் விரைவில் பிரசுரமாக இருப்பது இங்கு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.


இக்கல்வெட்டின் 8-10 வரிகளில் வரும் 'திருக்காமக்கோட்ட நாச்சியாரை எழுந்தருளிவித்துத் திருப்ரதிஷ்டை பண்ணுவித்து' என்ற சொற்தொடர் இப்பிரதேசத்தில் சக்திக்கென தனிக்கோவில்(காமக்கோட்டம்) அமைக்கப்பட்ட புதிய செய்தியைக் கூறுவதாக உள்ளது.


பேராசிரியர் பத்மநாதன் இது போன்ற செய்தி இலங்கையில் கிடைத்த பிற தமிழ்க் கல்வெட்டுகளில் இதுவரை காணப்படவில்லை எனக் குறிப்பிடுகின்றார்.


தமிழகத்தில் இரண்டாம் இராஜராஜ சோழன் காலத்தில் இருந்து சிவன் கோயிலுக்குப் பக்கத்தில் சக்திக்கு தனிக்கோயில் அமைக்கும் மரபு இருந்தமை தெரிகின்றது .


அம்மரபு சமகாலத்தில் இலங்கையிலும் பின்பற்றப்பட்டமைக்கு இக்கல்வெட்டு சான்றாகும்.


கோமரன்கடவல சிவன் கோயில் குலோத்துங்கசோழக் காலிங்கராயன் காலத்திற்கு முன்பே பன்நெடுங்காலமாக இருந்திருக்கின்றது என்பதும் கல்வெட்டில் வரும் ஆதிக்ஷேத்ரம் என்ற சொற்தொடரால் தெரிகின்றது.


காலிங்கராயன் ஈழத்தை வெற்றி கொண்டதற்கும் கலிங்கமாகனுக்குப் பட்டம் சூட்டியதற்கும் பிறகு இக்கோயிலுக்கு வந்து வழிபட்டு, சக்திக்காக தனிக்கோயில் எடுப்பித்து, தனக்கு சொந்தமாகக் கிடைத்த நிர்வாகப் பிரிவில் இருந்து சில நிலங்களை நிவந்தமாக கொடுத்தமையை இக்கல்வெட்டுக் குறிப்பிடுகிறது.


இந்த நிலங்களுக்கும் கோயில் நிர்வாகத்திறகும் உரித்துடையவர்களாக ஏற்பாடு செய்யப்பட்டவர்கள் காலிங்கராயன் சொற்படி இக்கல்வெட்டை பொறித்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.


கல்வெட்டின் ஓம்படைக்கிளவியில் குலோத்துங்கசோழக் காலிங்கராயனின் இந்த ஏற்பாடுகளுக்குப் பங்கம் செய்பவர்கள் கங்கைக் கரையில் ஆயிரம் குரால் (கபிலை) பசுக்களை கொன்ற பாவத்திற்கும், ஆயிரம் பிராமணர்களைக் கொன்ற பாவத்திற்கும் உட்பட்டு நாயாகவும், காகமாகவும் பிறப்பார்கள் எனக் குறிப்பிட்டு அவற்றின் உருவங்களும் கல்வெட்டுப் பொறிப்புக்கு கீழே கோட்டுருவமாக வரையப்பட்டுள்ளன.


இக்கல்வெட்டால் அறியப்படும் முக்கிய வரலாற்றுச் செய்திகளோடு, அவற்றில் இடம்பெற்றுள்ள சில பெயர்கள், சொற்கள் தொடர்பாக அறிஞர்கள் கூறும் கருத்துக்களும், விளக்கங்ளும் தமிழர் வரலாறு பற்றிய ஆய்வில் முக்கியத்துவம் வாய்ந்தனவாகக் காணப்படுகின்றன.


முதலில் ''ஸ்வயம்புவுமாந திருக்கோ (ணமலை) யுடைய நாயநாரை' என படிக்கப்பட்டதை பேராசிரியர் இரகுபதி 'ஸ்வயம்புவுமாந திருக்கோயிலுடைய நாயநாரை' எனப் படித்திருப்பதை பேராசிரியர் சுப்பராயலு பொருத்தமானதென எடுத்துக்கொண்டுள்ளார்.


இச்சிவாலயத்தில் காணப்படும் சிவலிங்கத்தின் அமைப்பு ஸ்வயம்பு என்ற சொல்லுக்குப் பொருத்தமாக இருப்பதினால் இக்கல்வெட்டு இந்தக்கோயிலையே குறிப்பிடுகின்றது என்பது பேராசிரியர் இரகுபதியின் விளக்கமாகும்.


மேலும் அவர் கல்வெட்டில் வரும் இடப்பெயரை 'லச்சிகாமபுரம்' என வாசித்து அது இப்பிரதேசத்திற்கு உட்பட்ட ஒரு இடத்தின் பெயர் எனக் குறிப்பிடுகின்றார்.


இதில் வரும் வேச்சார் நிலம் என்பது குளத்தோடு ஒட்டிய பயிர் நிலம் என்ற பொருளில் சிங்களக் கல்வெட்டுக்களில் வரும் வேசர(வாவி சார்ந்த) என்ற சொல்லுடன் தொடர்புடையது என்பதும் அவரது கருத்தாகும்.


பேராசிரியர் சுப்பராயலு கல்வெட்டில் வரும் 'மாநாமத்துநாடு' என்ற பெயர் இங்குள்ள பரந்த பிரதேசத்தை குறித்த இடமாக இருக்கலாம் எனக் கருதுகின்றார்.


இக்கூற்றை பொருத்தமாக கருதும் பேராசிரியர் பத்மநாதன் இதற்குப் பெரியகுளம் கல்வெட்டில் வரும் இதையொத்த பெயரை ஆதாரமாகக் காட்டுகின்றார்.


இக்கல்வெட்டில் 'பற்று' என்ற நிர்வாகப் பிரிவு பற்றிக் கூறப்பட்டுள்ளது.


இப்பெயர் சோழர் ஆட்சியில் வளநாடு என்ற நிர்வாகப் பிரிவிற்குச் சமமாகப் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் எனப் பேராசிரியர் பத்மநாதன் கருதுகின்றார்.


பற்று என்ற தமிழ்ச் சொல் சிங்களத்தில் 'பத்து' என அழைக்கப்படுகின்றது.


இச்சொற்கள் தற்காலத்திலும் இலங்கையின் பல பாகங்களிலும் நிர்வாக அலகுச் சொற்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.


இக்கல்வெட்டைப் படியெடுத்த போது கடும் மழையாக இருந்ததாலும், பிற்பகல் மூன்று மணிக்குப் பின்னர் இங்குள்ள காட்டில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் எனக் கூறப்பட்டதாலும் குறுகிய நேரத்திற்குள் இக்கல்வெட்டை படியெடுக்க வேண்டியிருந்தது.


ஆயினும் மீண்டும் இக்கல்வெட்டைப் படியெடுக்க வேண்டியிருப்பதால் மேலும் பல புதிய தகவல்கள் வெளிவரக்கூடும்.


இவ்விடத்தில் இக்கல்வெட்டைப் படிப்பதற்கும், அதன் வரலாற்று முக்கியத்துவத்தை வெளிக்கொண்டுவரவும் உதவிய என் ஆசிரியர்களுக்கும், எனது தொல்லியல் பட்டதாரி மாணவர்களுக்கும், ஆய்விடத்தை அடையாளப்படுத்திக் காட்டியதுடன் எம்முடன் இணைந்து பணியாற்றிய திருகோணமலை நண்பர்களுக்கும் என் நன்றிகள் என அவர் தெரிவித்துள்ளார்


https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0unBLieEjMJt7Ry3QVc2yE7cPLccGU6rgQQLCyESPe5kSZQYJM5Ep2DxU32gv3odEl&id=100070494699232&mibextid=Nif5oz


தொகுப்பு 

ஈழத்து வரலாறும் தொல்லியலும் 

தமிழ் மன்னர்களும் யாழ்ப்பாணக் கோட்டையும் - பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்

தமிழ் மன்னர்களும் யாழ்ப்பாணக் கோட்டையும் - பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்

ஈழத்து வரலாறும் தொல்லியலும்  

இலங்கையின் முதல் வரலாற்றுப் பாளி இலக்கியங்களில் ஒன்றான மகாவம்சத்தில் நாகதீபம் எனவும், தமிழ் இலக்கியங்களில் ஒன்றான மணிமேகலையில் நாகநாடு எனவும் அழைக்கப்பட்ட இன்றைய யாழ்ப்பாணப் பிராந்தியத்திற்குத் தொன்மையான தொடர்ச்சி குன்றாத பாரம்பரிய வரலாறு உண்டு. 


வரலாற்றுத் தொடக்ககாலத்தில் இப் பிராந்தியத்தில் வாழ்ந்தமக்கள் தமிழ்மொழியைப் பேசினர் என்பதை ஆனைக்கோட்டை, பூநகரி ஆகிய இடங்களில் கிடைத்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பிராமிச் சாசனங்கள் உறுதிப்படுத்துகின்றன. இருந்தும் இலங்கையின் ஏனைய பாகங்களில் அரச ஆதரவில் மேற்கொள்ளப்பட்டது போன்ற தொல்லியல் ஆய்வுகள் இப்பிராந்தியத்தில் மேற்கொள்ளப்படவில்லை. தனிப்பட்ட சிலரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் கிடைத்த தொல்லியல் சான்றுகள் கூட சரிவரப் பாதுகாக்கப்படாமை முக்கிய குறைபாடாகும்.


13 ஆம் நூற்றாண்டில் ஒரு மன்னன் ஆளுகைக்குட்பட்ட சுதந்திரத் தமிழரசொன்று யாழ்ப்பாணத்தில் நல்லூரைத் தலைநகராகக் கொண்டு உதயமானது இவ்வரசின் ஆதிக்கம் யாழ்ப்பாணக்குடா நாடு உட்பட கிழக்குமாகாணத்தின் பெரும் பகுதிவரை பரந்திருந்தது. இக்காலத்தில் யாப்பகுவ, குருநாகல், கம்பளை அரசுகள் தென்னிலங்கையில் இருந்த போதும் அவைகளைக் காட்டிலும் யாழ்ப்பாண அரசு படைப்பலத்திலும், பொருள் வளத்திலும் மேலோங்கிக் காணப்பட்டதாக நிகாயசங்கிரகய, இராஜவலிய முதலான சிங்கள நூல்கள் கூறுகின்றன. 


கி.பி. 1358 இல் கம்பளை இராச்சியத்தில் ஏற்பட்ட காலத்தில் மூன்றாம் பராக்கிரமபாகு யாழ்ப்பாண மன்னனின் உதவியை நாடினான். இதன் பொருட்டு அம்மன்னன் கம்பளையைச் சேர்ந்த சில பகுதிகளை யாழ்ப்பாண மன்னனுக்குக் கொடுத்தான்.ஈழத்து வரலாறும் தொல்லியலும் .கோட்டகம என்றஇடத்தில் கிடைத்த 14 ஆம் நூற்றாண்டுக்குரிய தமிழ்க்கல்வெட்டு ஒன்று யாழ்ப்பாண மன்னனின் படைகள் மலைநாடு புகுந்து அங்கு ஆட்சியிலிருந்த சிங்கள் அரசன் ஒருவனைத் தோற்கடித்தது பற்றிக் கூறுகிறது. இக்கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் இராஜவலிய என்ற சிங்கள நூல் மலைநாடு, கரையோரம் உட்பட ஒன்பது துறைமுகங்களில் இருந்து யாழ்ப்பாண மன்னர்கள் திறை பெற்றதாக கூறுகிறது. பேராசிரியர் கே. எம். டி. சில்வா என்ற அறிஞர் தென்னிந்தியப் படையெடுப்புகள் யாழ்ப்பாண அரசிற்கு அச்சுறுத்தலாக அமையாவிட்டால் தென்னிலங்கை முழுவதும் யாழ்ப்பாண அரசின் ஆதிக்கத்திற்குள் வந்திருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு, மத்தியகால இலங்கை வரலாற்றில் சீரும் சிறப்பும் பெற்ற நல்லூர் இராசதானி அமைந்த பிராந்தியத்திற்கு கந்தரோடை, வல்லிபுரம் போன்ற இடங்களைப் போலத் தொன்மையான பாரம்பரிய வரலாறு இருந்ததாகத் தெரியவில்லை. அவ்வாறு தெரிந்து கொள்ளக் கூடியளவிற்கு இப்பகுதியில் அகழ்வாய்வுகள் நடத்தப்பட்டதாகவும் கூறுவதற்கில்லை.ஈழத்துவரலாறும்தொல்லியலும்  இதனால் வரலாற்று ஆசிரியர்கள் பலரும் மத்திய காலத்தில் இப்பிரதேசம் சிறப்புப் பெற்றதற்குத் தமிழ் மன்னர்களின் இராசதானி இந்நகரில் அமைந்ததே காரணம் எனக் கருதுகின்றனர். ஆனால் சமீபத்தில் நல்லூரிற் கிடைத்த 'லஷ்மி' நாணயமும் இதற்குச் சற்றுத் தென்மேற்கே பூம்புகார்.மணியந்தோட்டம் ஆகிய இடங்களிற் கண்டு பிடிக்கப்பட்ட ஆதிக்குடியிருப்புகளுக்குரிய சான்றுகளும் கந்தரோடை, வல்லிபுரம் போன்ற நகரங்களுக்கு உள்ளவை போன்ற பாரம்பரிய வரலாறு நல்லூருக்கும் இருந்திருக்கலாம் எனக் கருத இடம் அளிக்கின்றன. 

இதேபோல் அன்னியரின் நினைவுச் சின்னமாக உள்ள யாழ்ப்பாணக் கோட்டையும், அதைச் சூழவர உள்ள இடங்களும் வரலாற்றிற் சிறப்புப் பெற்றமைக்கு நல்லூர் இராசதானியின் வீழ்ச்சிக்கு ஏதுவாய் இருந்த போத்துக்கேயரும் பின்வந்த ஒல்லாந்தர், ஆங்கிலேயர் கால ஆட்சியுமே காரணம் எனக் கூறப்படுகிறது. இவற்றுள்  கோட்டையின் அமைப்பும் அதன் கலைமரபும் நல்லூரில் உள்ள மந்திரிமனை, கற்றோரணவாசல் முதலியனவற்றைப் போல் அன்னியருக்குரிய தென்பதில் ஐயமில்லை. ஆனால் இவ்விடத்தில் இக் கோட்டை கட்டப்பட்டமைக்கு அன்னியர் தான் முதலில் காரணமாக இருந்தார்களா அல்லது இவர்களுக்கு முன்னரே தமிழ்மன்னர்களுடைய கோட்டை இவ்விடத்தில் இருந்தது தான் காரணமா? ஆய்வுக்குரிய விடயமாகும். என்பது

இக்கோட்டை அமைந்த சுற்றாடலின் அமைவிடத்தையும், இவ்விடத்துடன் கடல் வழித்தொடர்பு கொள்ளக் கூடிய பண்ணைத்துறை, நாவாந்துறை. அராலித்துறை, ஊர்காவற்துறை, கொழும்புத்துறை போன்ற டங்களையும் நோக்கும்போது ஆதிகால வெளிநாட்டு வர்த்தகத்தில் இவ்விடமும் தொடர்பு கொண்டிருந்ததெனக் கூறலாம். கோட்டைப் பகுதியிற் கண்டு பிடிக்கப்பட்ட உரோம நாணயமும், இதற்குச் சற்றுத் தென்மேற்கே வேலணை, மண்கும்பான், சாட்டி போன்ற இடங்களில் கண்டு பிடிக்கப்பட்ட ஆதிக்குடியிருப்புகள் பற்றிய சான்றுகளும் உரோம நாணயங்களும், உரோம மட்பாண்டங்களும், அரேபிய, கிரேக்க, சீன மட்பாண்டங்களும் ஆதியில் இவ்விடங்களுடன் தென்னிந்திய, கிரேக்க, உரோம, அரேபிய, சீனத் தொடர்புகள் இருந்தமைக்குச் சான்றாகும்.


இவ்விடங்கள் பத்தாம் நூற்றாண்டிற் சோழர் ஆட்சியுடன் மேலும் முக்கிய வர்த்தக நடவடிக்கைப் பிரதேசமாக விளங்கியிருக்கலாம் எனக் கருத இடமுண்டு. தமிழ் நாட்டிற்குக் கிட்டவுள்ள இவ்விடங்களைச் சோழர் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் மேற்கில் இருந்து ஏற்பட்ட அராபியரது வர்த்தக எழுச்சியைத் தடுக்கவும், இலங்கையின் பெரு நிலப்பகுதியிலிருந்து ஏற்பட்ட சிங்கள மன்னர்களின் எழுச்சியைக் கட்டுப்படுத்தவும், கிழக்கே தென்கிழக்காசிய நாடுகளுடன் வர்த்தகத் தொடர்பை ஏற்படுத்தவும் வாய்ப்பாக இருந்திருக்கும். ஈழத்துவரலாறும்தொல்லியலும் இதை உறுதிப்படுத்தக்கூடிய அதிக சான்றுகள் யாழ்ப்பாணத்தில் இது வரை கண்டு பிடிக்கப்படாவிட்டாலும், இங்கு பரவலாகக் கண்டுபிடிக்கப்பட்ட சோழர் கால நாணயங்களும், சோழரை நினைவுபடுத்தும் செம்பியன்பற்று, வளவர் கோன் பள்ளம், கங்கைகொண்டான் போன்ற இடப்பெயர்களும் கமால் வீதி நாரந்தனை போன்ற இடங்களிற் கிடைத்த இவர்கள் காலச் சிற்பங்களும் இதை ஓரளவு உறுதிப்படுத்துகின்றன. இவற்றுட் கோட்டை அமைந்துள்ள இடம் சோழரின் முக்கிய வர்த்தகத் துறைமுகமாக அல்லது அவர்களின் பாதுகாப்பு மையமாக இருந்ததெனக் கருத இடமுண்டு.

போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்ட யாழ்ப்பாண மன்னர் கால ஆலயங்களையும் அரண்மனைகளையும் கொண்டு இவ்விடத்திற் புதிய கோட்டை கட்டப்பட்டாலும் அவை அனைத்தும் யாழ்ப்பாண மன்னர் காலத்திற்குரியவையெனக் கூறமுடியாது. இக்கோட்டையின் மேற்குப் புறப் பகுதியில் பழமையான கட்டிடங்களுக்குரிய கற்றூண்கள் காணப்படுகின்றன. அவற்றுட் சில. 10ஆம் நூற்றாண்டுக்குரிய கிரந்த எழுத்துக்களையும் கொண்டுள்ளன. இவை பிற்பட்ட பல்லவர் அல்லது முற்பட்ட சோழர் காலத்திற்குரியவையாகும். 


இக் கற்களை இன்னொரு இடத்தில் இருந்து கொண்டு வரப்பட்டவையெனக் கருத இடமிருப்பினும், சிலவேளை இவ்விடத்தில் இருந்த ஒரு கட்டிடத்தின் கற்களாகவும் இவற்றைக் கொள்ளலாம். இக்கோட்டையில் உள்ள இன்னொரு கல்வெட்டு 11 ஆம் நூற்றாண்டில் இராசேந்திர சோழன் நல்லூரில் அமைத்த ஆலயம் ஒன்றுக்குத் தானம் அளித்தது பற்றிக் கூறுகிறது. இது தற்போதைய நல்லூர்க் கந்தசாமி கோயிலுக்கு முற்பட்டதான பழைய ஆலயத்தையோ அல்லது சோழர் காலத்தில் இங்கிருந்த இன்னொரு ஆலயத்தையோ குறித்திருக்கலாம் எனப்பலரும் கருதுகின்றனர். ஆனால் அக்காலத்தில் நல்லூர் என்ற பெயர் தற்போதைய நல்லூருக்கு இருந்ததற்கு ஆதாரமில்லை. இதேவேளை கோட்டை அமைந்துள்ள இடம் யாழ்ப்பாணம் எனக் குறிக்கப்பட்டதற்கும் ஆதாரமில்லை. இதனால் மேற் கூறப்பட்ட சோழர் கல்வெட்டில் வரும் நல்லூர் யாழ்ப்பாணத்தின் முன்னோடிப்பெயரா என்ற சந்தேகம் ஏற்படுகின்றது. சோழர் ஆட்சியில் நல்லூர் என்ற பெயர் தமிழ்நாட்டின் பல இடங்களிற்கு இடப்பட்டதற்கு ஆதாரமுண்டு. இதே போல் இலங்கையில் அவர்களின் ஆட்சிக் குட்பட்ட திருகோணமலை, பூநகரி, களுத்துறை, குருநாகல் போன்ற இடங்களிலும் இப்பெயர்கள் உள்ளன. இவ்விடங்கள் பெரும்பாலும் கடற்கரையை அண்டிய துறைமுகங்களிலும் நகரங்களிலும் இருந்ததுடன் இவற்றில் முக்கிய வர்த்தக. பண்பாட்டு நடவடிக்கைகள் இருந்தமைக்கான ஆதாரங்களும் உள்ளன. 

இவற்றுள் திருகோணமலையிலும், பூநகரியிலும் இவர்கள் கால ஆலயங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அப்படியாயின், கோட்டையில் இருந்த சோழக் கல்வெட்டை முன்பு இங்கிருந்த ஆலயத்தின் கல்வெட்டாகக் கருத இடமுண்டு. அவ்வாறு கருதுவதற்கு இன்னொரு ஆதாரத்தை இங்கு எடுத்துக் காட்டலாம். இக்கோட்டையின் வடக்காக உள்ள நிலப் பகுதி இன்று 'ஐநூற்றுவன் வளவு' என அழைக்கப்படுகிறது. 'ஐநூற்றுவன்' என்பது சோழர் காலத்திற்குரிய முக்கிய வணிகக் கணங்களில் ஒன்றாகும். ஈழத்துவரலாறும்தொல்லியலும் இவ் வணிகக் கணங்களே சோழர் காலத்தில் வர்த்தக நடவடிக்கைகளில் மட்டுமன்றிப் பல ஆலயங்களைக் கட்டுவதற்கும், நகரங்களை அமைப்பதற்கும் காரணமாக இருந்தன குறிப்பாக, பொலநறுவையிலும் பதவியாவிலும் உள்ள சில ஆலயங்களின் தோற்றம் வணிகக்கணங்களோடு தொடர்பு படுத்திக் கூறப்பட்டுள்ளது 

கோட்டையில் இருந்த சோழர் கல்வெட்டில், ஆலயத்திற்குத் தானம் கொடுத்தவனாக 'சாத்தன்' என்பவன் குறிப்பிடப்பட்டுள்ளான். சாத்தன் என்றால் வியாபாரிகள் கூட்டம் என்று பொருள்படும். பல சோழக் கல்வெட்டுக்களிலே தானம் அளித்தவன் பெயர்களில் சாத்தன் என்ற பெயர் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே சோழர் கால ஆலயம் பற்றிய கல்வெட்டும், அவர் கால வணிகக்கணம் பற்றிய பெயரும் யாழ்ப்பாணக் கோட்டை அமைந்த பிரதேசத்துடன் தொடர்புடையனவாக இருப்பதினால் இக்கல்வெட்டில் வரும் ஆலயம் இங்கிருந்திருக்கலாம் எனவும் கருத இடமுண்டு. இச்சான்றுகளை நோக்கும் போது யாழ்ப்பாண ஆரியச்சக்கரவர்த்தி மன்னர் காலத்திற்கு முன்னரே சோழர் காலத்திலேயே தற்போதைய கோட்டை அமைந்துள்ள பிரதேசம் முக்கிய வர்த்தகப் பண்பாட்டு மையமாக விளங்கியதெனக் கூறலாம். இவ்விடமே பிற்காலத்தில் யாழ்ப்பாண மன்னர்களின் முக்கிய கோட்டையாக விளங்கியிருக்க வேண்டும்.

ஆரியச் சக்கரவர்த்தி மன்னர்கால அரண்மனைகளையும், ஆலயங்களையும் விபரித்துக் கூறும் 'யாழ்ப்பாண வைபவ மாலை' அவர்கள் காலக் கோட்டை பற்றியும் கூறுகிறது. செண்பகப் பெருமாள் படையெடுப்புப் பற்றிக் கூறும் 'இராஜ வலிய' என்ற சிங்கள நூல் யாழ்ப்பாணத் தில் இவன் அமைத்த காவல் அரண், கோட்டை என்பன பற்றியும் கூறுகிறது.ஈழத்து வரலாறும் தொல்லியலும்  இச்சான்றுகள் போர்த்துகேயருக்கு முன்னரே தமிழ் மன்னர் காலக்கோட்டை யொன்று யாழ்ப்பாணத்தில் இருந்ததென்பதை  உறுதிப்படுத்துகின்றன. அவ்வாறான கோட்டையொன்று இருந்ததென்பதை ஏற்றுக் கொண்டால், அது கடற்கரையை அண்டிய பகுதியாகவே இருந்திருக்கலாம் எனக் கருத இடமுண்டு. ஆரியச் சக்கரவர்த்தி மன்னன் ஒருவனின் வெற்றி பற்றிக் கூறும் கோட்டகம சாசனத்தில் வரும் பொங்கொலி நீர் சிங்கை நகர்' கூற்று இம்மன்னர்கால அரசிருக்கை அல்லது இராசதானியின் கட்டிடம் ஒன்று கடற்கரையை அண்டியிருக்கலாம் என்பதையும் உணர்த்துவதாகக் கருத்தில் எடுத்துக்கொள்ள இடமுண்டு.

தற்போதைய நிலையில் யாழ்ப்பாணக் கோட்டையைத் தவிர. யாழ்ப்பாணத்தின் கடற்கரையை அண்டிய ஏனைய பகுதியில் யாழ்ப்பாண மன்னர் காலத் தொல்பொருட்சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. மேலும் போர்த்துக்கேயருக்கும் யாழ்ப்பாண மன்னர்களுக்கும் இடையிலான போராட்டங்கள் பல கொழும்புத்துறைக்கும் பண்ணைத்துறைக்கும் இடையிலே நடந்ததாகத் தெரிகிறது. இவற்றை நோக்கும் போது யாழ்ப்பாண மன்னர் காலக் கோட்டை தற்போதைய கோட்டை இருக்கும் பகுதியில் இருந்ததெனக் கூறலாம். அக்காலத்தில் இக்கோட்டை மிகப் பெரிதாக இருந்ததெனக் கூறமுடியாவிட்டாலும் பெருமளவிற்கு மண்ணையும் கல்லையும் கொண்டு கட்டப்பட்டிருந்ததெனக் கூறலாம். போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தில் இருந்த இந்து ஆலயங்களை இடித்து அதன் அருகே புதிய கத்தோலிக்கத் தேவாலயங்களைக் கட்டியபோதிலும், ஆரம்பத்தில் அவை களிமண் கொண்டு கட்டப்பட்டதாகத் தெரிகிறது. இதேபோல் யாழ்ப்பாண மன்னர் காலக் கோட்டையை இடித்து அல்லது அதில் சில மாற்றங்களைச் செய்து போர்த்துக்கேயர் தமது கோட்டையாகப் பயன்படுத்தியிருக்க வேண்டும் இதையே பின்னர் வந்த ஒல்லாந்தர் தற்போதைய நிலையில் கட்டி முடித்தனர்.  கோட்டையைச் சரிவர ஆராய்ந்தால் யாழ்ப்பாண கோட்டைக்கும் யாழ்ப்பாண மன்னர்களுக்கும் இடையிலான தொடர்பு மேலும் துலக்கம் பெறும்.

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02U6sywe1ykAL3SucM5YFRgLHtiKy1N38DnyQMysevuMfERZD6HtXZKyVCNWmtLzQJl&id=100070494699232&mibextid=Nif5oz

தொகுப்பு ஆக்கம்

ஈழத்து வரலாறும் தொல்லியலும் 

கந்தசாமி கிரிகரன் 

 - வெளிச்சம் 1993

Wednesday 7 October 2020

2500 ஆண்டு பழமையான 59 மம்மி சவப்பெட்டிகள்: ஊடகத்திற்கு முன்பு திறப்பு-கிடுகிடுக்க வைத்த காட்சி!

2500 ஆண்டு பழமையான 59 மம்மி சவப்பெட்டிகள்: ஊடகத்திற்கு முன்பு திறப்பு-கிடுகிடுக்க வைத்த காட்சி! 

எகிப்தில் உள்ள தொல்பொருள் ஆய்வாளர்கள் சனிக்கிழமையன்று, 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் புதைக்கப்பட்ட 59 சவப்பெட்டியை கண்டுபிடித்துள்ளனர். 2500 ஆண்டுகள் பழமையான மம்மிகள் 2500 ஆண்டுகள் பழமையான மம்மிகள் அனைத்தும் நன்கு பாதுகாக்கப்பட்டுப் பதப்படுத்தப்பட்டுள்ளது. 

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான பண்டைய எகிப்திய தலைநகரான மெம்பிஸின் நெக்ரோபோலிஸான சக்காராவின் பரந்த புதைகுழியில் கெய்ரோவுக்கு தெற்கே இந்த கண்டுபிடிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. மரத்தினால் ஆனா சர்கோபாகி கூடியிருந்த ஊடகங்களுக்கு முன்பு அலங்கரிக்கப்பட்ட மரத்தினால் ஆனா சர்கோபாகி (sarcophagi) சவப்பெட்டி ஒன்றைத் திறந்து, அடக்கம் செய்யப்பட்ட துணியில் மூடப்பட்டிருந்த மம்மியின் உருவத்தை ஆராய்ச்சி குழு ஊடகத்திற்கு முன்பு வெளிப்படுத்தியது. 

அதிர வைத்த 63 வயது பெண்ணின் செயல்: 19 வருடமாக செய்த ஏமாற்று வேலை அம்பலம்! மம்மிகளின் மேல் ஹைரோகிளிஃபிக் (hieroglyphic) எழுத்துக்கள் 2500 ஆண்டுகள் பழமையான மம்மிகளின் உடல் மூடப்பட்டிருந்த துணி மற்றும் கல்வெட்டுகளில் ஹைரோகிளிஃபிக் (hieroglyphic) எழுத்துக்கள் பிரகாசமான வண்ணங்களில் அமைக்கப்பட்டுள்ளது. 

முதலில் 13 சவப்பெட்டிகள் "இந்த கண்டுபிடிப்பு குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்," என்று பழங்கால உச்ச கவுன்சிலின் பொதுச் செயலாளர் மொஸ்டபா வஜீரி கூறினார். முதல் 13 சவப்பெட்டிகளின் கண்டுபிடிப்பு கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது, ஆராய்ச்சி குழு 12 மீட்டர் (40 அடி) ஆழத்தில் மீண்டும் தனது ஆராய்ச்சியைத் துவங்கிய பொழுது இன்னும் பல மம்மியின் சவப்பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

ஓடும் லாரியை துப்பாக்கியுடன் சேஸ் செய்து 10 கோடி மதிப்புடைய போன்கள் கொள்ளை! சிக்கியது எப்படி? 4,700 ஆண்டுகள் பழமையான பிரமிடு அறியப்படாத கூடுதல் சவப்பெட்டிகள் இன்னும் அங்கே புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சுற்றுலா மற்றும் பழங்கால அமைச்சர் கலீத் அல்-அனானி கூறியுள்ளார். 

இந்த சவப்பெட்டிகள் அனைத்தும் 4,700 ஆண்டுகள் பழமையான ஜோசரின் பிரமிடுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். இது முடிவில்லை.. இதுவே துவக்கம் "எனவே இன்று கண்டுபிடிப்பின் முடிவு அல்ல, இது பெரிய கண்டுபிடிப்பின் தொடக்கமாக நான் கருதுகிறேன்" என்று அவர் கூறியுள்ளார். 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் சீல் வைக்கப்பட்ட சவப்பெட்டிகள், பண்டைய எகிப்தின் பிற்பகுதியில், கிமு ஆறாம் அல்லது ஏழாம் நூற்றாண்டிலிருந்து வந்தவை என்று குழுவின் அமைச்சர் தெரிவித்துள்ளார்

 Google எச்சரிக்கை: பிளே ஸ்டோரிலிருந்து 34 மால்வேர் ஆப்ஸ்கள் நீக்கம்! உங்க போனில் இவை இருக்கக்கூடாது! மம்மியாக்கப்பட்ட வண்டு..பாம்பு..சிங்கம்.. சக்காராவின் அகழ்வாராய்ச்சிகள் சமீபத்திய ஆண்டுகளில் கலைப்பொருட்கள் மற்றும் மம்மியாக்கப்பட்ட பாம்புகள், பறவைகள், ஸ்காராப் வண்டுகள் மற்றும் சிறிய வகை சிங்கங்கள் எனப் பலவிதமான பிற விலங்குகளின் மம்மிகளை கண்டுபிடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

 தாமரை மலரின் பண்டைய கடவுள் தாமரை மலரின் பண்டைய கடவுளான நெஃபெர்டெமை சித்தரிக்கும் வெண்கல சிலை உட்பட டஜன் கணக்கான சிலைகளும் இப்பகுதியில் காணப்பட்டுள்ளது. இன்னும் பலவிதமான தெய்வ சிலைகளும், சிற்பங்களும், விலங்குகளின் சிற்பங்களும் கிடைக்கப்பட்டுள்ளது என்று ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது. 26 வது வம்சத்தின் பண்டைய பாதிரியார்கள் எகிப்திய சமுதாயத்தின் 26 வது வம்சத்தின் பண்டைய பாதிரியார்கள், மூத்த அரசியல்வாதி மற்றும் முக்கிய நபர்களின் சர்கோபாகியாக இவை இருக்கலாம் என்று முதற்கட்ட ஆய்வுகள் சுட்டிக்காட்டுவதாக அனானி கூறியிருக்கிறார். 

59 சவப்பெட்டிகளும் விரைவில் திறக்கப்படும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 59 சவப்பெட்டிகளும் கிசா பீடபூமியில் வைத்து விரைவில் திறக்கப்பட்டு, மேற்கொண்டு ஆராய்ச்சிகள் நடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அனைத்து சவப்பெட்டிகளும் கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகத்திற்குக் கொண்டு செல்லப்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான கூடுதல் தகவல்கள் வரும் காலத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Sunday 12 August 2018

சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஷ்பரட்ணத்தின் "இலங்கைத் தமிழர் ஒரு சுருக்க வரலாறு" மற்றும் "ஈழத்தமிழர் மரபுரிமை அடையாளங்கள் நூல் வெளீயீட்டு விழா 19.08.2018
சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஷ்பரட்ணத்தின் "இலங்கைத் தமிழர் ஒரு சுருக்க வரலாறு" மற்றும் "ஈழத்தமிழர் மரபுரிமை அடையாளங்கள் நூல் வெளீயீட்டு விழா 19.08.2018

Sunday 14 January 2018

சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஷ்பரட்ணத்தின் "இலங்கைத் தமிழர் ஒரு சுருக்க வரலாறு" மற்றும் "ஈழத்தமிழர் மரபுரிமை அடையாளங்கள் நூல் வெளீயீட்டு விழா

சண்டிலிப்பாய் கிராமத்தில் அரிய தமிழ்க் கல்வெட்டு

சண்டிலிப்பாய் கிராமத்தில் அரிய தமிழ்க் கல்வெட்டு ********************************************** சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் நிர்வாகப் பி...